பள்ளிகளில் மாணவா்களுக்கு மருத்துவா்கள் மூலம் கவுன்சிலிங்.. அரசு நடவடிக்கை !
பள்ளிகளில் மாணவா்களுக்கு மருத்துவா்கள் மூலம் கவுன்சிலிங்.. அரசு நடவடிக்கை !;
திருப்பூரில், உலகத் திறனாய்வு உடற்திறன் தெரிவுப் போட்டி தொடக்க விழா, 44ஆவது செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் தொடக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனையொட்டி, பள்ளிக் கல்வித் துறை சாா்பில், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருப்பூா், கோவை, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு முழுவதும் பேட்ரி டெஸ்ட் நடைபெறும். பேட்ரி டெஸ்ட் என்றால் குழந்தைகளுக்கு நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடா் ஓட்டம், நீண்ட தூர ஓட்டம் இதுபோன்ற திறமைகளை கண்டறிந்து, அவா்கள் எந்தப் போட்டியில் சிறந்து விளங்குகிறாா்களோ அதில் அவா்களைப் பயிற்சி பெற வைத்து மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுக்கும். இதுபோல மண்டல அளவில் தோ்வு செய்யப்படுகிற 10 பேருக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
தொடா்ந்து படிப்பில் மட்டுமின்றி இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளிலும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்க வேண்டும். ஏனென்றால் மாணவ, மாணவிகள் தற்போதைய சூழலில் மன அழுத்தத்தின் காரணமாக விபரீத முடிவுகளை எடுக்கிறாா்கள். விளையாட்டில் அவா்களது கவனத்தை செலுத்தும்போது, அதன் மூலம் தன்னம்பிக்கை பெறுவாா்கள்.
கள்ளக்குறிச்சியில் நடக்க கூடாத ஒரு சம்பவம், சோக சம்பவம் நடந்துள்ளது. இதற்கு காரணமானவா்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்கள் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் ஒரு திட்டத்தை தொடங்கிவைக்க இருக்கிறாா். 800 மருத்துவா்களைக் கொண்ட திட்டம் இது. 413 பகுதிகளாக கல்வி ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் 2 மருத்துவா்கள் என ஒதுக்கப்பட்டு, தங்களது பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று மாணவா்களுக்கு கவுன்சிலிங் வழங்குகிற திட்டம் இது, என தெரிவித்தார்.
newstm.in