விழுப்புரம் மாவட்டம் சின்னபாபு சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகலிங்கம். இவரது மகள் தனலட்சுமி (19). இவர், கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கல்லூரியில் மாதிரி தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று (17-ம் தேதி)  காலை கல்லூரிக்கு வந்த மாணவி, கல்லூரியின் பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை பார்வையிட்டனர். இதையடுத்து, மாணவியின் பேக்கை சோதனையிட்டனர். அதில் கடிதம் ஒன்று இருந்தது.

அந்த கடிதத்தில், தனக்கு தேர்வு பயம் உள்ளது. அதனால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எழுதியிருந்தார். தொடர்ந்து போலீசார், மாணவி தேர்வு பயத்தால் தான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி ஒருவர் கல்லூரி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.