போலீசாரை மிரட்டிய திமுக கவுன்சிலரின் கணவர்.. கட்சியில் இருந்து சஸ்பெண்ட் !!
போலீசாரை மிரட்டிய திமுக கவுன்சிலரின் கணவர்.. கட்சியில் இருந்து சஸ்பெண்ட் !!
சென்னையில் ரோந்து பணியிலிருந்த போலீசாரை மிரட்டிய விவகாரத்தில் திமுக கவுன்சிலரின் கணவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி 51 ஆவது வார்டு திமுக உறுப்பினராக நிரஞ்சனா என்பவர் உள்ளார். இவரது கணவர் ஜெகதீசன், சென்னையில் இரவில் ரோந்து பணியிலிருந்த போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன.
இதையடுத்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில், திமுக கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் உள்பட 5 பேர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது, மிரட்டல் விடுப்பது, பொது இடங்களில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று பேர் வழக்கறிஞர்கள் ஆவர்.
இந்நிலையில், ரோந்து பணியிலிருந்த போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, மிரட்டிய விவகாரத்தில் திமுக கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இதனை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
newstm.in