மீண்டும் திமுக வசமானது சென்னை மாநகராட்சி.. புதிய மேயர் யார் என எதிர்பார்ப்பு !!
மீண்டும் திமுக வசமானது சென்னை மாநகராட்சி.. புதிய மேயர் யார் என எதிர்பார்ப்பு !!
தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகராட்சியின் மேயர் பதவியை பிடிப்பதில் அரசியல் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும். சுமார் 334 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான கவுன்சிலர் பதவிக்கு கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. சென்னை எப்போதும் திமுக கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில், ஆரம்பம் முதலே திமுக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வந்தனர்.
இந்நிலையில் மூன்று மணி நிலவரப்படி 134 வார்டுகளில் நடைபெற்று முடிந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் 116 இடங்களில் திமுக வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. அதிமுக 13 இடங்களிலும், பிற கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம் சென்னை மாநகராட்சி மீண்டும் திமுக வசம் ஆகிறது.
கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக முதல் முறையாக சென்னை மாநகராட்சியை கைப்பற்றியிருந்தது. தற்போது சென்னை மாநகராட்சி திமுக வசம் வந்துள்ள நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி உறுப்பினர்கள் அடுத்த மாதம் (மார்ச்) 4ஆம் தேதி மாநகராட்சியின் மேயரை மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
இதனால் திமுகவில் மேயர் பதவியை பிடிக்கப்போவது யார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. வெற்றியால் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
newstm.in