செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர்.. மதுரை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு..!
செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர்.. மதுரை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு..!
மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. அப்போது மேயர் இந்திராணி மற்றும் கமிஷனர் வருகை தராத நிலையில், இருக்கை ஒதுக்கீடு சம்பந்தமாக திமுக - அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
இதையடுத்து, ‘அதிமுக உறுப்பினர்கள் வெளியே செல்ல வேண்டும்’ என்று திமுக உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதுகுறித்து முறையிட அதிமுக உறுப்பினர்கள் கூட்டரங்கத்தை விட்டு வெளியேறி மேயர் அறைக்கு சென்றனர்.
அதை பதிவு செய்ய சென்ற செய்தியாளர்களை, மேயர் அறை முன்பு இருந்த திமுகவினர் இழிவாகப் பேசி, கீழே தள்ளி தாக்குதல் நடத்தி கேமராக்களை காலால் எட்டி உதைத்தனர்.
திமுகவினரின் இந்த செயலைக் கண்டித்து செய்தியாளர்கள் அனைவரும் மேயர் அறை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாநகராட்சி மேயர் அறைக்குள், மேயரின் கணவர் பொன் வசந்தும், கவுன்சிலர் அல்லாத திமுகவினரும், பெண் கவுன்சிலர்களின் உறவினர்களும் இருந்துகொண்டு நிர்வாகம் செய்வதாகவும், அவர்களால்தான் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டினர்.
ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மேயர் தரப்பில் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பின்பு காவல் துறையினர் குவிக்கப்பட்டு, மேயரை கூட்ட அரங்குக்கு அழைத்துச் சென்றனர்.
செய்தியாளர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் இந்திராணி தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுகவினர் செய்தியாளர்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.