திமுகவின் தேர்தல் பரிசே சொத்து வரி உயர்வு.. சட்டசபையில் இருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு..!
திமுகவின் தேர்தல் பரிசே சொத்து வரி உயர்வு.. சட்டசபையில் இருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு..!
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை குறைந்தபட்சமாக 25 சதவீதம் முதல் அதிகபட்சமாக 150 சதவீதம் வரை உயர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு அறிவித்தது.
இந்த சூழலில், தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை கூட்டத்தொடர் இன்று கூடியது. காலையில் அவை கூடியதும், கேள்வி நேரம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விதி 110ன் கீழ் அறிக்கை வாசித்தார்.
இந்நிலையில், வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகள் கோரிய நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் சொத்து வரி உயர்வு குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது, “சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாதது என்பதால், மக்கள் துணை நிற்க வேண்டும். ஏழை, நடுத்தர மக்களை பாதிக்காமல் சொத்து வரி மாற்றப்பட்டுள்ளது.
புதிய பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், உள்ளாட்சி அமைப்புகளை சமாளிப்பதற்கு வரி உயர்வு தேவை. சொத்து வரி உயர்வை மனமுவந்து செய்யவில்லை” என்றார். முதல்வரின் விளக்கத்தை ஏற்க மறுத்து அதிமுக, பாஜக வெளிநடப்பு செய்தது.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட சொத்து வரி பொது மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.
சொத்து வரியை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு குறிப்பிடவில்லை. மக்களுக்கு திமுகவின் தேர்தல் பரிசே சொத்து வரி உயர்வு” என்றார்.