குரூப்-4 தேர்வு 3 மணி நேரம் நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு..!!
குரூப்-4 தேர்வு 3 மணி நேரம் நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியாளர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், குரூப்-4 தேர்வு குறித்த அறிக்கை மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும், போட்டித் தேர்வுகள் ஜூன் மாதம் நடத்தப்படும் என்றும், மொத்தம் 5,255 காலியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடைபெறும் என இந்த ஆண்டுக்கான தேர்வுக்கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குரூப்-4 தேர்வு பற்றிய அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன், குரூப்-4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறும் என்றார்.
அப்போது அவர் கூறியதாவது, “குரூப்-4 தேர்வுக்கு மார்ச் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும் தேர்வுகள் ஜூலை 24-ம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை மொத்தம் 3 மணி நேரம் நடைபெறும்.
7,382 பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. இதில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பபடும். 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் இதில் அடங்கும். 90 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதும் மையத்தை டி.என்.பி.எஸ்.சியே இனி தேர்வு செய்யும்.” என்றார்.