அட கொடுமையே.. காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் தேர்வு எழுதிய பிளஸ்- 2 மாணவர்கள் !!
அட கொடுமையே.. காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் தேர்வு எழுதிய பிளஸ்- 2 மாணவர்கள் !!
வாகனங்களின் விளக்கு வெளிச்சத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு நடைபெற்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் கிழக்கு சாம்பரான் மாவட்டத்தில் உள்ள மோதிஹாரி நகரில் உள்ள, மகாராஜா ஹரேந்திர கிஷோர் கல்லூரியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இடைத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் ஏறக்குறைய 400 மாணவர்கள் தேர்வு எழுத வந்தனர். ஆனால், அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததால் மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை கல்லூரி நிர்வாகம் சமாதானம் செய்து வைத்து தேர்வெழுத அழைத்தனர். வழக்கமாக தேர்வு 1.45 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு நிறைவடைய வேண்டும். ஆனால் போராட்டம் காரணமாக மாலை 4.30 மணி வரை மாணவர்களுக்கு விடைத்தாள்கள் கொடுக்கப்படவில்லை. 6 மணிக்கு இருட்டத் தொடங்கியதும் தான் மாணவர்களுக்கு வெளிச்சம் தேவைப்பட்டது. அப்போது கல்லூரி நிர்வாகம் கூறியதை கேட்டு மாணவர்களும் பெற்றோரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது, கல்லூரியில் மின்சார சேவையே இல்லை என்பது தெரிய வந்தது. கல்லூரி தரப்பில் ஜெனரேட்டர் கொண்டு வந்தாலும் அது அனைத்து வகுப்புகளுக்கும் போதவில்லை.
இதனால், மாணவர்களை அழைத்து வந்த பெற்றோர், தங்களது கார், இருசக்கர உள்ளிட்ட வாகனங்களின் முகப்பு விளக்கை எரிய விட்டு, அதில் அமர்ந்து மாணவர்களை தேர்வெழுத வைத்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் புகார் அளித்ததை அடுத்து, மாவட்டக் கல்வி நிர்வாகம் சார்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வாகனங்களில் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் மாணவர்கள் தேர்வு எழுதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in