தமிழகத்தில் மின்தடை ஏற்படும் அபாயம்.. அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்..!

தமிழகத்தில் மின்தடை ஏற்படும் அபாயம்.. அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்..!;

Update: 2022-07-25 12:46 GMT

பராமரிப்பு பணி காரணமாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1 மற்றும் 2-வது அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அணு உலைகள் மூலம் தினசரி தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது. இதன் மூலம், தமிழகத்திற்கு சுமார் 500 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது.

தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபரில் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. அங்கு தற்போது 3 மற்றும் 4-வது அணு உலைகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் சுமார் 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும், 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆண்டுதோறும், அணு உலைகளில் எரிந்த யுரேனியம் எரிக்கோல்கள் மாற்றும் பணிகள் நடைபெறும். இதனை முன்னிட்டு, அணு உலைகளில் மின் உற்பத்தி நிறுத்தப்படும்.

அதன்படி, இந்த ஆண்டும் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டது.

சுமார் 40 நாட்களுக்கு பிறகு பணிகள் முடிவடைந்த பின்னர் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது.

Similar News