எல்லா சனிக்கிழமையும் பத்திரம் பதியலாம்.. தமிழக பதிவுத்துறை அதிரடி அறிவிப்பு..!

எல்லா சனிக்கிழமையும் பத்திரம் பதியலாம்.. தமிழக பதிவுத்துறை அதிரடி அறிவிப்பு..!

Update: 2022-03-03 16:19 GMT

நிதியாண்டின் இறுதி மாதமான மார்ச் மாதத்தில் ஆவணங்கள் பதிவு அதிகமாக இருக்கும் என்பதால், சனிக்கிழமையும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மார்ச் மாதம் நிதியாண்டின் இறுதி மாதம் என்பதால், சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணங்கள் பதிவு அதிகமாக இருக்கும்.

அத்துடன், கடன் பெற்று வீடு மற்றும் மனை வாங்குபவர்கள் மார்ச் மாதத்திற்குள் ஆவணப்பதிவை முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பார்கள்.

தொழில் முனைவோரின் நிலையும் இதுவே ஆகும். ஆனால், சில சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப் பதிவுக்கான டோக்கன் அனைத்து வேலை நாட்களிலும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, அதிகரித்துள்ள ஆவணப்பதிவுகளுக்கு ஏதுவாக சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்களில், தமிழ்நாடு பதிவுச் சட்ட விதி 4 ‘சிறப்பு அவசரநிலை’ அடிப்படையில் விடுமுறை கால ஆவணப்பதிவிற்கான கட்டணமான ரூ.200/- மட்டும் கூடுதலாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களின் ஆவணப்பதிவை உரிய நேரத்தில் முடித்துக் கொள்ளுமாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News