வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. மழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. மழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்
வங்க கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கோடை வெயில் தொடங்கி கொளுத்தி வருகிறது. அதிகரிக்கும் வெப்ப அலையால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
அதன்படி, தென் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டியுள்ள வங்க கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்றும் ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக இன்றும், நாளையும் தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
newstm.in