சர்ச்சைகளுக்கு இடையே நடந்து முடிந்த தருமபுரம் பட்டணப் பிரவேசம்!!
சர்ச்சைகளுக்கு இடையே நடந்து முடிந்த தருமபுரம் பட்டணப் பிரவேசம்!!
மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் சுமந்து செல்லும் பட்டணப் பிரவேசம் நிகழ்வு சிறப்பாக நடந்து முடிந்தது.
தருமபுரம் ஆதீனத்தில், பல ஆண்டுகளாக, குருபூஜை விழாவின் ஒரு பகுதியாக தருமபுர ஆதீனத்தை பக்தர்கள் பல்லக்கில் தூக்கி செல்லும் நிகழ்வு நடைபெற்றுவருகிறது. ஆனால் மனிதரை மனிதர் தூக்குவது இழிவானது எனக் கூறி திராவிடர் கழகத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதன்தொடர்ச்சியாக பட்டணப் பிரவேசம் நிகழ்வுக்கு மயிலாடுதுறை கோட்டாசியர் தடைவிதித்தார். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக ஆன்மீக அமைப்புகள் பல எதிர்ப்பு தெரிவித்தன.
உயிரைக் கொடுத்தாவது இந்த பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம் என்று மதுரை ஆதீனம் கூறினார். பா.ஜ.க சார்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சைவ மடங்களைச் சேர்ந்த ஆதீன கர்த்தர்கள் முதல்வரை சந்தித்து பட்டணப் பிரவேச நிகழ்வுக்கு அனுமதி கோரினர்.
இதனையடுத்து தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார். இந்நிலையில், இன்று மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தநிகழ்ச்சியில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். இருவரும் சில விநாடிகள் பலக்கைத் தூக்கினர். அதனையடுத்து, பக்தர்கள் தொடர்ந்து தூக்கி ஊர்வலம் நடைபெற்றது.
newstm.in