இலங்கையில் இருந்து கோத்தபய தப்பியோட இந்தியா உதவியா?
இலங்கையில் இருந்து கோத்தபய தப்பியோட இந்தியா உதவியா?;
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விலைவாசி உயர்வு ஒருபுறம், உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மறுபுறம் என அந்நாட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தினர். உள்நாட்டில் வெடித்துள்ள மக்கள் போராட்டத்துக்கு அஞ்சி, இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பினார். அவர் மாலத்தீவுக்கு குடும்பத்துடன் தப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனையடுத்து, மாலத்தீவில் இருந்து கோத்தபயவை வெளியேற்ற வேண்டும் என அந்நாட்டு அதிபர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதனிடையே, கோத்தபய இலங்கையில் இருந்து தப்பிசெல்ல இந்திய அரசு தான் உதவியதாக தகவல் பரவியது. இந்தியா உதவியதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.
ஆனால், இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. இதுபற்றி கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் டுவிட்டர் பதிவு மூலம் அளித்த விளக்கத்தில், இலங்கையில் இருந்து கோத்தபய ராஜபக்சே வெளியேறி பயணிக்க இந்தியா உதவியதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதை இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுக்கிறது. இது ஆதாரமற்றது, ஊகத்தின் அடிப்படையிலானது, என தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கையில் ஜனநாயக வழிமுறைகள், மதிப்பீடுகள், ஜனநாயக அமைப்புகள், அரசியல்சாசன கட்டமைப்புகள் வழியாக செழிப்பான, முன்னேற்றத்துக்கான எதிர்பார்ப்புகளை நனவாக்குவதற்கு அந்த நாட்டு மக்கள் முயற்சிக்கின்றனர். இதற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம், எனவும் கூறப்பட்டுள்ளது.
newstm.in