மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசை குறை கூற வேண்டாம்  என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 100 யூனிட் பயன்பாடுக்கு மேலாக மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறும்போது, சாக்கு, போக்கு காரணங்களை சொல்லி மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. தமிழக அரசு, மின் செயற்கை தட்டுபாட்டை ஏற்படுத்தி, வெளி மார்க்கெட்டில் இருந்து, அதிக பணம் கொடுத்து வாங்குகிறார்கள். சொந்தமாக சோளார் பேனல் அமைக்க வேண்டுமானால், ஒரு கிலோ வாட்க்கு ரூ.5,000 தமிழக மின்வாரியம் கப்பம் கட்ட வேண்டியுள்ளது.

மத்திய அரசு கொடுக்கும் மானியம் வேண்டும். ஆனால் மத்திய அரசு சொல்லும் லஞ்சம் இல்லா நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு இல்லாதது, கூழுக்கும் ஆசை, மீசையிலும் ஒட்டக்கூடாது என்பதை போல் உள்ளது. மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு வலியுறுத்தவில்லை.

வீட்டு கூரையின் மீது சோளார் அமைக்க 24 மணி நேரத்தில் அப்ரூவல் வழங்கப்படும் என தமிழக அரசுக்கு அறிவிக்க திராணி உள்ளதா? மின்துறை அமைச்சர், மீடியா மூலம் மக்களை ஏமாற்றாமல், முதலமைச்சரை சந்தித்து, சோளார் பேனல் அமைக்க அப்ரூவல் வழங்குவது பற்றி பேசவேண்டும்.

மத்திய அரசு கொடுப்பது மானியம். தேவை எனில் பெற்றுகொள்ளலாம், மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசை குறை கூற வேண்டாம். மத்திய அரசு மீது பழி போடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.எதிர்வரும் 23ஆம் தேதி மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும், என்று அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in