அரசுக்கு அவப்பெயர்.. சென்னை மேயருக்கு திமுக தலைமை வாய்ப்பூட்டு..!
அரசுக்கு அவப்பெயர்.. சென்னை மேயருக்கு திமுக தலைமை வாய்ப்பூட்டு..!
சென்னையில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 74-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட பிரியா (28) வெற்றி பெற்று கவுன்சிலராக பதவியேற்றார்.
அதைத் தொடர்ந்து நடந்த மேயர் தேர்தலில் போட்டியின்றி தேர்வானார். துணை மேயராக திமுகவைச் சேர்ந்த மகேஷ்குமார் பொறுப்பேற்றார்.
ஆரம்பம் முதலே மேயர் செய்ய வேண்டிய பல பணிகளை துணை மேயரே கவனித்து வந்தார். இதைத் தொடர்ந்து, மேயர் தலைமையில் நடந்த மாநகராட்சி கூட்டத்தை வழிநடத்த வேண்டிய பிரியா, அந்த பொறுப்பை துணை மேயரிடம் ஒப்படைத்தார். இது, அரசியல் அரங்கில் மட்டுமின்றி பொதுவெளியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை கோடம்பாக்கம் மண்டலத்தில் கடந்த 6-ம் தேதி மண்டல ஆய்வு கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, “கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட அம்மா உணவகத்தை பெருந்தன்மையோடு நடத்தி வருகிறோம். பல இடங்களில் அம்மா உணவகங்கள் மக்களுக்கு பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கின்றன” என்றார்.
உடனே சுதாரித்த துணை மேயர் மகேஷ்குமார், மேயர் பேச்சை இடைமறித்து, “ஒரு அம்மா உணவகத்தால் மாநகராட்சிக்கு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது” எனக் கூறி சமாளித்தார்.
அம்மா உணவகம் பயன்படுத்தாமல் பூட்டிக் கிடப்பதாக மாநகராட்சி மேயர் பிரியா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. மேயரின் இந்த பேச்சை தொடர்ந்து அதிமுக மற்றும் அமமுகவினர் தற்போதைய திமுக அரசை குற்றஞ்சாட்டினர்.
பிரியாவின் பேச்சு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைந்ததாக, திமுக தலைமைக்கு புகார் சென்றது. இதையடுத்து, மறு அறிவிப்பு வரும் வரை செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்க்கும்படி மேயர் பிரியாவுக்கு திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து திமுகவினர் கூறியதாவது: ‘மேயர் பிரியா, மாநகராட்சியின் அனைத்து துறைகளிலும் தன்னை மேம்படுத்திக் கொள்ளும் வரை செய்தியாளர் சந்திப்பை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில கூட்டங்களில் செய்தியாளர்களை சந்திக்க நேரிட்டால், துணை மேயர், கமிஷனர் அறிவுறுத்தலின்படி செயல்படவும் திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது’ என்று கூறினர்.