சிலிண்டர் விலையை கேட்டு தலைசுற்றுகிறது.. மீண்டும் கட்டணம் உயர்வு !!

சிலிண்டர் விலையை கேட்டு தலைசுற்றுகிறது.. மீண்டும் கட்டணம் உயர்வு !!

Update: 2022-06-16 08:38 GMT

புதிய சிலிண்டர் இணைப்பு வாங்குவதற்கான கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான குடும்பத்தினர் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுவிட்டனர். இது பெருமிதம் தான் என்றால் சிலிண்டர் விலை உயர்வு தான் அவர்களை தள்ளாடவைக்கிறது. தங்கள் சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை சிலிண்டர் வாங்க ஒதுக்குகின்றனர். அனைவருக்குமே சிலிண்டர் இணைப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு தரப்பிலிருந்து உஜ்வாலா யோஜனா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.
 
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு வருகிறது. தேர்தல் சமயத்தில் விலை குறைவாக இருந்த நிலையில், தேர்தல் முடிந்த பிறகு ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு வருகிறது. அனைத்து நகரங்களிலும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டரின் விலை 1000 ரூபாயைத் தாண்டிவிட்டது.
 


ஏற்கெனவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை, தங்கம் விலை, பால் விலை, காய்கறி விலை, உணவுப் பொருட்கள் விலை உயர்வால் பணவீக்கம் அதிகமாக உள்ளது. இதுபோன்ற சூழலில் சிலிண்டர் விலையும் அதிகமாக உயர்ந்துள்ளதால் பொதுமக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், புதிய சிலிண்டர் இணைப்புக்கான கட்டணத்தை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிதாக 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டர் இணைப்புக்கான கட்டணம் ஒரு சிலிண்டருக்கு ரூ.750 உயர்த்தப்பட்டு, ரூ.2,200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்குமுன் ரூ.1,450 ஆக இருந்தது. அதேபோல, 2 சிலிண்டர் இணைப்புடன் புதிய இணைப்பு கட்டணம் ரூ.4,400 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்னர் இது ரூ.2,900 ஆக மட்டுமே இருந்தது.
 


ஏற்கெனவே இந்தியாவில் சிலிண்டர் விலை அதிகரித்துக் கொண்டே செல்வதால் ஏழை எளிய மக்கள் நிறையப் பேர் சிலிண்டர் இணைப்பே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். சிலிண்டர் மானியமும் நிறையப் பேருக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. சிலிண்டர் விலை உயர்வு மட்டுமல்லாமல் இப்போது சிலிண்டர் இணைப்புக் கட்டணமும் உயர்த்தப்பட்டுவிட்டால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
 
பெரிய சிலிண்டர் மட்டுமல்லாமல் 5 கிலோ எடை கொண்ட சிறிய சமையல் சிலிண்டருக்கு வைப்புத் தொகையாக ரூ.800 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அந்தக்கட்டணமும் இப்போது ரூ.1,150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு ஜூன் 16ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in


 

Similar News