மாணவர்களின் ஜாதி கேட்பது ஏன் தெரியுமா..?: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!
மாணவர்களின் ஜாதி கேட்பது ஏன் தெரியுமா..?: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“கல்வி மேலாண்மை தகவல் மையம் (எமிஸ்) இணையதளத்தின் மூலம் பள்ளிகளில் பதிவு செய்யப்படும் மாணவர் விவரங்களில் ஜாதி குறிப்பிடுவது குறித்து வெவ்வேறு விதமாக விமர்சனங்கள் எழுகிறது.
முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியும். அதுபோல, என்ன ஜாதி என்று தெரிந்தால்தான் அதற்கான இடஒதுக்கீட்டு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பலன்கள் வழங்கமுடியும்.
மேலும், மத்திய - மாநில அரசின் திட்டங்கள் செயல்படுத்துவதற்கும் அது ஏதுவாக இருக்கும். சாதியை சொல்லித்தான் ஆகவேண்டும் என்று மாணவர் சேர்க்கையின்போது பள்ளி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்தினால் அது தவறு. இது மாணவர்களின் விருப்பம்.
மாணவர்கள் ஜாதி தெரியும்போதுதான் அவர்கள் என்ன வகுப்பு? என்பதை அறியமுடியும். நாங்கள் வகுப்பைத்தான் எடுத்துக்கொள்கிறோமே தவிர, ஜாதியை பார்க்கவில்லை.
அதேவேளை, சமுதாய மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர் தங்களுக்கான உரிமைகளை கேட்டுப் பெறுவதை யாராலும் தடுக்கமுடியாது.
2013-ம் ஆண்டில் இருந்தே மாணவரின் ஜாதியை பதிவு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. திமுக ஆட்சி அமைந்ததற்கு பிறகு, விருப்பம் உள்ளவர்கள் ஜாதியை தெரிவிக்கலாம்.
விருப்பம் இல்லாதவர்களின் கருத்துகளையும் பதிவு செய்து வந்தோம். கல்வி மேலாண்மை தகவல் மையத்தை பொறுத்தவரை அதிலுள்ள ‘டேட்டா பேஸ்’ பதிவில் மாணவரின் ஜாதியும் இடம்பெற்றிருந்தது.
இனி, மாணவரின் ஜாதி அந்த பதிவில் இருக்கக்கூடாது என்று எண்ணினோம். மாணவரின் ஜாதி அவர் சார்ந்த பிரிவை அறிய மட்டுமே பதிவு செய்யப்படுகிறது.
எதிர்காலத்தில் ஒரு மாணவரைப் பற்றிய தகவலை தேடும்போது அவர் என்ன வகுப்பு என்பது மட்டுமே வரவேண்டும், சாதி குறித்து தெரியக்கூடாது என்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
மே மாதத்தில் இருந்து ஜாதி என்பதே எந்த ‘டேட்டா’ பதிவுகளிலும் இடம்பெறக்கூடாது என்ற வகையில் அரசு செயல்பட்டு வருகிறது. 2013-ம் ஆண்டில் இருந்து செயல்பாட்டில் இருந்து வந்த நடைமுறையை மாற்றியிருக்கிறோம்.
அதேபோல, சுகாதாரத்துறை மூலம் மாணவிகள் உடல்நலம் சார்ந்த சில கேள்விகளை பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அந்த கேள்விகளை மாணவர்களிடம் கேட்கலாமா? என்பது குறித்த ஆய்வு நடந்து வருகிறது. அதற்குள் இந்த தகவல் கசிந்ததின் காரணமாக தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டிருக்கிறது.
எதையும் நாங்கள் ஆராயாமல் செயல்படுத்துவது கிடையாது. எனவே, எவை தேவையோ அவை மட்டுமே அதில் இடம்பெறும். மாணவிகள் சங்கடப்படும் வகையில் கேள்விகள் இடம்பெறாது.
நேரடியாக கேட்கக்கூடாத கேள்விகளை சுற்றி வளைத்து கேட்கும் விதமாகவே நமது செயல்பாடு இருக்கும். எனவே, கவலைப்பட தேவையில்லை. சங்கடப்படும் படியான கேள்விகள் நிச்சயம் இடம்பெறாது” என்று அவர் கூறினார்.