எனக்கே என்டு கார்டா? - எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் செக் !!

எனக்கே என்டு கார்டா? - எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் செக் !!

Update: 2022-06-27 17:02 GMT

அதிமுக நிரந்தர பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக தொடர்ந்து இடியாப்ப சிக்கலில் தவித்து வருகிறது. பல்வேறு சர்ச்சைகள், கோஷ்டி மோதல்களால் அக்கட்சி தவித்து வருகிறது. அதிமக முதன் முறையாக இரட்டைத் தலைமையில் செயல்பட தொடங்கியது. இதற்காக அதிமுக சட்ட விதிகளை மாற்றி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர், முறையே, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர்.

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேல், இரட்டைத் தலைமையின் கீழ் பயணித்த அதிமுகவில், தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் தலைதூக்கி உள்ளது. கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், இந்த விவகாரம் பூகம்பமாக வெடித்தது. ஒற்றைத் தலைமை விவகாரத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, கடந்த 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை ஒற்றைத் தலைமை பதவியில் அமர வைக்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையே, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகி விட்டதாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அறிவித்தனர்.

அதிமுகவில் இந்த பரபரப்பான சூழலில், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவது; அவரை கட்சியில் இருந்து நீக்குவது; புதிய பொருளாளர்; எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளர் ஆக்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில், சென்னையில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுவதை அறிந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தேனியில் இருந்து அவசர அவசரமாக சென்னைக்கு புறப்பட்டார். தேனியில் ஒரு வார காலம் தங்கி இருந்து ஆதரவாளர்களை சந்திக்க திட்டமிட்டிருந்த அவர், சென்னைக்கு திடீரென புறப்பட்டது பல்வேறு விவாதங்களை எழுப்பி உள்ளது. 

அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கும் பட்சத்தில், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு உள்ளதாகவும், அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்க, தலைநகர் சென்னைக்கு அவசரமாக வருவதாகவும் அவரது ஆதரவாளர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே நீதிமன்ற உத்தரவால் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு எந்தமுடிவு எட்டமுடியாமல் தவித்தது. மீண்டும் தன்னை வீழ்த்த எடப்பாடி பழனிசாமி எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கு சட்டப்படி செக் வைக்க ஓ.பன்னீர்செல்வம் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

newstm.in
 

Similar News