அத்தனையும் அள்ளிட்டு போய்ட்டாங்க.. ஓபிஎஸ் தரப்பு மீது சி.வி.சண்முகம் புகார்..!
அத்தனையும் அள்ளிட்டு போய்ட்டாங்க.. ஓபிஎஸ் தரப்பு மீது சி.வி.சண்முகம் புகார்..!;
அதிமுக அலுவலகத்தில் கட்சியின் முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், “கடந்த 11-ம் தேதி அதிமுக அலுவலகத்தை சூறையாடி, முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் வந்த வாகனத்தில் அதிமுக அலுவலகத்தில் இருந்த பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அதிமுக தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து, கட்சியின் தலைமை அலுவலக அசல் பத்திரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கோவை, புதுச்சேரி, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள அதிமுக அலுவலக இடத்துக்கான அசல் பத்திரங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
மேலும், இவற்றுடன் 31 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 2 கம்ப்யூட்டர், வெள்ளி வேல், முத்துராமலிங்கத் தேவர் தங்க கவசம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், கட்சிக்கு வாங்கப்பட்ட 37 வாகனங்களின் அசல் பதிவு சான்றிதழ்கள், அதிமுக - பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை அசல் பத்திரம் என பல்வேறு ஆவணங்கள் ஓபிஎஸ் தரப்பினரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது” என சி.வி.சண்முகம் தெரிவித்தார்.