பரபரப்பு! ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை!!
பரபரப்பு! ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை!!
சிதம்பரத்தில் வினாத்தாள் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேந்திரக்கிள்ளை கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி (26) என்பவர் கடலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். தற்போது 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதால் தேர்வு பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார்.
அதன்படி சிதம்பரம் தில்லை நகரில் உள்ள தனியார் பள்ளியில் வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறை முன்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த 6ஆம் தேதி முதல் இவர் இந்த பணியில் சுழற்சிமுறையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பெரியசாமி பாதுகாப்பு பணியில் இருந்தபோது திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பெரியசாமியின் உடலை விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினார்.
சமீபத்தில் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அடுத்த மாதம் 10ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில்தான் பெரியசாமி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறப்பதற்கு முன்பாக செல்போனில் பேசி இருக்கிறார். அதுகுறித்து ஆய்வு செய்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
newstm.in