#BREAKING:-பரபரப்பு.. முன்னாள் முதல்வர் சென்ற படகு கவிழ்ந்து விபத்து..!

#BREAKING:-பரபரப்பு.. முன்னாள் முதல்வர் சென்ற படகு கவிழ்ந்து விபத்து..!

Update: 2022-07-22 16:37 GMT

ஆந்திர மாநிலத்தில் கனமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக 600-க்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள பாதிப்பில் சிக்கி குழந்தைகள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். முழுமையான சேத விவரம் இன்னும் சில நாட்களில் தெரியவரும் என மாநில பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கோதாவரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் அதை பொருட்படுத்தாமல், ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்றார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக, தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் சந்திரபாபு நாயுடுவுடன் சென்றனர்.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சோம்பல்லி கிராமத்திற்கு சந்திரபாபு நாயுடு படகு மூலம் சென்றபோது, கிராமத்தை நெருங்கிய நிலையில் ராஜோலு மண்டலம் சோம்பள்ளி அருகே படகு வந்து கொண்டிருந்த போது, ​​எதிர்பாராத விதமாக படகு தண்ணீரில் கவிழ்ந்தது.

இதனால் படகில் இருந்த தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் தண்ணீரில் மூழ்கினர். இதில் சந்திரபாபு நாயுடுவும் நிலை தவறி தண்ணீரில் விழுந்தார்.

இதை கவனித்த மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக ஆற்றில் குதித்து, அனைவரையும் பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Similar News