சாயல்குடியில் காங்கிரஸ் கட்சியினர் வைத்த பேனரால் பரபரப்பு..!!
சாயல்குடியில் காங்கிரஸ் கட்சியினர் வைத்த பேனரால் பரபரப்பு..!!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று ஜாமீனில் இருந்த பேரறிவாளனை கடந்த 18-ம் தேதி உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள், மக்கள் பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் பேரறிவாளனின் விடுதலையை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் பேனர் ஒன்றை வைத்துள்ளனர்.
அதில், பேரறிவாளனின் விடுதலையான நாள் இந்திய நீதிக்கு கருப்பு தின நாள் என்றும், நெஞ்சம் பொறுக்குதில்லையே தலைவா உன் இழப்பு போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
மேலும் தமிழக அரசே எங்கள் கேள்வி என்னவென்றால், தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே தீவிரவாதி என்றால், பாரத பிரதமர் ராஜீவ் காந்தியை திட்டமிட்டு படுகொலை செய்த நபர் யார்? என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த ஃபிளக்ஸ் போர்டால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.