ஓஎம்ஆர் சாலையில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு!!
ஓஎம்ஆர் சாலையில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு!!
சென்னை ஓஎம்ஆர் சாலை துரைப்பாக்கம் அடுத்த ராஜீவ்நகர் சிக்னல் அருகே மர்ம பெட்டி ஒன்று கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெட்டியை கண்ட கண்ணகிநகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராஜேஷ்(30) என்பவர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்த காவல் துறையினர் நேரில் சென்று பார்த்தபோது பெட்டி கனமாக இருந்தது.
போலீஸார் பதட்டமடைந்த நிலையில் வெடிபொருள் ஏதேனும் இருக்குமோ என்ற அச்சத்தில் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வர வைத்தனர்.
பின்னர் கிராம நிர்வாக அலுவலர் பாக்கியலஷ்மி முன்பாக பெட்டியை திறந்து பார்த்தபோது அதனுள் இரும்பு லாக்கர் பெட்டி இருந்தது. அதனை உடைத்து பார்த்தபோது கட்டுக்கட்டாக 35 கட்டு வெள்ளை தாள்களும், 3 இங்க் பாட்டில்களும் இருந்தது தெரியவந்தது.
இந்த மர்ம பெட்டியில் இருந்த வெள்ளை காகிதங்களும், இங்க் பாட்டில்களும் கள்ள நோட்டு அடிக்க பயன்படுத்த பயன்படும் உபகரணங்கள் என போலீசார் தெரிவித்தனர்.
பெட்டியை வீசி சென்ற நபர் யார் கள்ள நோட்டு அச்சடிக்கும் கும்பலா, சென்னையில் கள்ள நோட்டுகள் எங்கு அச்சடிக்கப்படுகிறது என பல்வேறு கோணங்களில் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
newstm.in