நாமக்கலில் பரபரப்பு..!! ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்த 11-ம் வகுப்பு பள்ளி மாணவன்..!!

நாமக்கலில் பரபரப்பு..!! ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்த 11-ம் வகுப்பு பள்ளி மாணவன்..!!

Update: 2022-03-27 04:45 GMT

மோடமங்கலம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி, செல்வி தம்பதியினரின் மூன்று மகன்களில், 2-வது மகனான ரிதுன் அருகிலுள்ள தண்ணீர் பந்தல் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தான்.

ரிதுன் நேற்று காலை வகுப்பறையில் தன்னுடன் படிக்கும் சக மாணவியிடம் பேசிக் கொண்டிருந்ததை தவறாக புரிந்து கொண்ட பள்ளியின் தாவரவியல் ஆசிரியர் தெய்வாம்பாள், ரிதுனையும், அவனது பள்ளித் தோழியையும் கண்டித்து அடித்ததோடு, வகுப்பறைக்கு வெளியே ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிற்கவைத்து அருந்ததியினர் பிரிவைச் சேர்ந்த ரிதுனை சாதியின் பெயரைச் சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ரிதுன், கடிதம் எழுதி வைத்து விட்டு பள்ளிக்கு அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர், ரிதுனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் ரிதுனை சாதியின் பெயரால் தகாத வார்த்தைகளால் திட்டி தற்கொலைக்கு தூண்டிய பள்ளியின் ஆசிரியை தெய்வாம்பாள் மற்றும் பள்ளியை முறையாக வழி நடத்தாத தலைமை ஆசிரியர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும், பாதிக்க பட்ட மாணவனின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் எனக்கோரி மாணவன் ரிதுனின் பெற்றோர் மற்றும் உறவினர்களும், தமிழ் புலிகள் கட்சி, ஆதி தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சியினரும் இணைந்து மாணவனின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த பெருந்துறை காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையில் எவ்வித தீர்வும் எட்டப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடலை வாங்க மறுத்ததோடு, இச்சம்பவத்தை கண்டித்து நாளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதற்கிடையே தற்கொலை செய்துகொண்ட மாணவன் ரிதுன் எழுதிய கடிதத்தை சக மாணவ மாணவிகள் படித்ததாகவும், அதில் தனது தற்கொலைக்கு ஆசிரியர் தெய்வாம்பாள்தான் காரணம் என எழுதி இருந்ததாகவும், ரிதுன் எழுதிய கடிதத்தை ஆசிரியர்கள் மாற்றி கொடுத்துள்ளதாகவும், தற்பொழுது ரிதுன் எனக்கூறி காட்டப்படும் கடிதம் ரிதுன் எழுதியது இல்லை எனவும் சக மாணவிகள் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News