பரபரப்பு தகவல்கள்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணத்தின் பின்னணி !!
பரபரப்பு தகவல்கள்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணத்தின் பின்னணி !!
தமிழகத்தின் ஆளுநரான ஆர்.என்.ரவி, திமுக தலைமையிலான தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள முக்கிய கோப்புகளுக்கு கையெழுத்திடாமல் இருக்கும் அவர், மாநில அரசின் கொள்கை நிலைப்பாடான புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மற்றும் நீட் தேர்வு ரத்து ஆகியவற்றுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்.
இவரின் இத்தகைய செயல்பாட்டால் தமிழக அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதனால் ஆளுநரை மாற்ற வேண்டும் என்று திமுகவின் கூட்டணி கட்சிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், அண்மையில் ஐயப்பா சேவா சங்க நிகழ்ச்சியில் ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது திமுகவின் கொள்கைக்கு எதிரான கருத்துகளை ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். சனாதன தர்மம் மற்றும் ரிஷிகள் முனிவர்களை அவர் புகழ்ந்து பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதனை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடுமையான விமர்ச்சித்துள்ளது. அரசியல் சாசனத்தை தூக்கிப்பிடிக்க வேண்டிய ஆளுநர், மனுதர்மத்தை தூக்கிப் பிடிக்கக்கூடாது என அறிவுறுத்தி கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்றிரவு டெல்லி செல்ல இருக்கிறார். விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் அவரின் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை இந்த பயணத்தின்போது சந்தித்து பேசும் ஆளுநர் ஆர்.என் ரவியிடம், குடியரசுத் தலைவர் தேர்தல் முடியும் வரை தமிழக அரசுடனான மோதல் போக்கை கைவிடும்படி மத்திய அரசு அறிவுறுத்தவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நிலுவையில் இருக்கும் ஒரு சில கோப்புகளுக்கு கையெழுத்திடுவது பற்றி ஆலோசிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
newstm.in