தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து காணப்பட்ட நிலையில், அண்மை நாட்களாக தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக பதிவாகி வருகிறது.

கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்ததால், இதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். 

இந்நிலையில் தற்போது தேனி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.