விடுதி மேலாளரிடம் மாமூல் வசூலிக்க முயன்ற போலி எஸ்.ஐ. கைது!!
விடுதி மேலாளரிடம் மாமூல் வசூலிக்க முயன்ற போலி எஸ்.ஐ. கைது!!
சென்னை விருகம்பாக்கத்தில் விடுதி மேலாளரிடம் சப் இன்ஸ்பெக்டர் எனக்கூறி பணம் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை முகப்பேர் கிழக்கு, ஜெ.ஜெ. நகரில் வசித்து வருபவர் அன்புச்செல்வம்(39) என்பவர் விருகம்பாக்கம், சாலிகிராமம் பகுதியில் உள்ள விடுதியில் மானேஜராக பணிபுரிந்து வருகிறார். 2 தினங்களுக்கு முன்பு விடுதிக்கு வந்த ஒருவர் அன்புச்செல்வனிடம் தான் சப்-இன்ஸ்பெக்டர் என அடையாள அட்டையை காண்பித்துள்ளார்.
மேலும் விடுதியின் மீது வழக்குபதிவு செய்யாமல் இருக்க மாதம் ரூ.30 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என கூறி விட்டு சென்றுள்ளார். மறுநாள் வந்த அந்த நபர் கேட்ட பணத்தை தான் சொல்லும் இடத்தில் கொண்டு வந்து கொடுக்குமாறு கூறி விட்டு அன்புசெல்வம் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.500 பணத்தை எடுத்து கொண்டு சென்று விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அன்புசெல்வம் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு அந்த நபரை பிடித்தனர்.
விசாரணையில் அவர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த விஜய பிரதாபன்(26), என்பதும் போலியாக சப்-இன்ஸ்பெக்டர் போன்று அடையாள அட்டை வைத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து விஜய பிரதாபமனிடமிருந்து ரூ.400, ஒரு மோட்டார் சைக்கிள், போலி அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர் மீது கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பண மோசடி வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in