தீ பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து தந்தை ஒருவர் தனது 3 வயது மகனை 2ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசிய காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அந்த குடியிருப்பின் 2ஆவது மற்றும் 3ஆவது தளங்களில் தீ பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் கொளுந்து விட்டு தீ எரியத் தொடங்கியதால், அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர். ஆனால், கட்டிடத்தில் 3 வயது மகனுடன் தந்தை ஒருவரும் சிக்கியிருந்தார்.

தகவல் குறித்து தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்கபோராடினர். எனினும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால் அவர்களை மீட்பத்தில் சிரமம் ஏற்பட்டது. மேலும் தீயும் வேகமாக பற்றியது. இதனால் ஜன்னல் வழியே தனது குழந்தையை தூக்கி எறிந்துவிட்டு, தானும் குதிக்க வேண்டிய கட்டாயம் தந்தைக்கு ஏற்பட்டது.
 


இதனையடுத்து, குழந்தையை தூக்கி வீசுமாறு அங்கிருந்த காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் கூச்சலிட்டனர். தந்தை முதலில் தயங்கினார். ஆனால் தீ உக்கிரமடைந்து கட்டிடம் முழுவதும் சூழ்ந்ததால், மகனைத் தூக்கி எறிவதைத் தவிர அவருக்கும் வேறு வழியில்லை. இறுதியாக தனது மகனை 2ஆவது மாடியின் ஜன்னலிலிருந்து தூக்கி எறிந்தார்.

கீழே தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் மிகவும் சாமர்த்தியமாக குழந்தையைப் பிடித்தனர். சில வினாடிகளுக்குப் பிறகு, தந்தையும் குதித்தார். அவரையும் தீயணைப்பு வீரர்கள் கீழே விழாமல் பிடித்தனர். தந்தையும் மகனும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.



newstm.in

Tags: