அரியலூர் ரயில் நிலையம் அருகே வசித்து வருபவர் நடராஜன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உமா. இந்த தம்பதியருக்கு நிஷாந்தினி (18) என்ற மகளும், நிவாஸ் (16) என்ற மகனும் உள்ளனர்.

நிஷாந்தினி, அருகே உள்ள ஒரு தனியார் பெண்கள் மெட்ரிக் பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்ச்சி பெற்றார். பொதுத்தேர்வில் 600 க்கு 539 மதிப்பெண்கள் பெற்றார்.

சின்ன வயதில் இருந்தே டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த அவர் கடந்த 2 மாதமாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் நீட் பயிற்சி மையத்தில் ஆன்லைன் வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு நிஷாந்தினி வெகு நேரம் தனி அறையில் அமர்ந்து படித்துக் கொண்டு இருந்தார். அப்போது அவரது தாயார், சாப்பிட்டுவிட்டு தூங்கு; நாளை படித்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.

அதற்கு நிஷாந்தினி, “எப்படியாவது நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டர் ஆக வேண்டும். நீங்கள் போய் தூங்குங்க. நான் கொஞ்ச நேரம் படித்து விட்டு தூங்குகிறேன் எனக் கூறியுள்ளார்.

இதை அடுத்து தாயாரும் அவரது சகோதரரும் தூங்குவதற்கு சென்றுவிட்டனர். இன்று அதிகாலை 4 மணி அளவில் தாயார் எழுந்து பார்த்தபோது, நிஷாந்தினி படித்துக் கொண்டிருந்த அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தது. பின்னர் சமையலறையில் சென்று பார்த்தபோது அங்கு நிஷாந்தினி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அலறி துடித்தார்.

இது பற்றி தகவல் அறிந்த அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மாணவியின் உடலை மீட்டு அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.