எம்பிபிஎஸ் படிப்பிற்கான இறுதி கட்ட கலந்தாய்வு.. தேதி அறிவித்தது சென்டாக்..!

எம்பிபிஎஸ் படிப்பிற்கான இறுதி கட்ட கலந்தாய்வு.. தேதி அறிவித்தது சென்டாக்..!

Update: 2022-03-30 12:22 GMT

புதுச்சேரியில், எம்பிபிஎஸ். படிப்புக்கான இறுதி கட்ட கலந்தாய்வு  வரும் 2-ம் தேதி நடப்பதாக சென்டாக் அறிவித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சென்டாக் கன்வீனர் ருத்ர கவுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் இடங்களுக்கு கடந்த 28-ம் தேதி நடைபெறுவதாக இருந்த இறுதி கட்ட (மாப் அப்) சென்டாக் கலந்தாய்வு திடீரென ரத்து செய்யப்பட்டது. அந்த கலந்தாய்வு வரும் 2-ம் தேதி நடக்கிறது.

இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீடும், 10 மணிக்கு அரசு ஒதுக்கீடு மாணவர்களுக்கும் (அனைத்து இட ஒதுக்கீடு), 10.30 மணிக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும், 11 மணிக்கு சிறுபான்மையின ஒதுக்கீட்டு இடங்களுக்கும், மதியம் 2 மணிக்கு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது.

கலந்தாய்வில் கலந்து கொள்ள ஒரு இடத்திற்கு 10 பேர் என்ற விகிதத்தில் மாணவர்கள் அழைக்கப்படுவார்கள். இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் நாளை (31-ம் தேதி) மாலை 5 மணிக்குள் பதிவு கட்டணத்தை செலுத்தி தங்கள் விருப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டு இடம் கிடைத்த மாணவர்கள் வரும் 4-ம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். இதேபோல், காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் இன்ஜினீயரிங் கல்லூரியிலும், மாகி மகாத்மா காந்தி அரசு கல்லூரியிலும், ஏனாம் அரசு கலை கல்லூரியிலும் இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News