விளைவித்த கரும்புகளுக்கு தீ.. விரக்தியில் விவசாயி தற்கொலை..!
விளைவித்த கரும்புகளுக்கு தீ.. விரக்தியில் விவசாயி தற்கொலை..!
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் ஜியோ ராய் தாலுகாவிற்கு உட்பட்ட ஹிங்கன்கான் கிராமத்தைச் சேர்ந்தவர் நாம்தேவ் ஆத்மராம் ஜாதவ் (32). இவர், தனக்கு சொந்தமான 2 ஏக்கர் விளை நிலத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று காலை 11 மணியளவில் தனது வயலுக்கு வந்த நாம்தேவ் ஆத்மராம் ஜாதவ், அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகளை தீயிட்டு கொளுத்தினார்.
பின்னர், தனது வீட்டின் அருகே வசிக்கும் உறவினருக்கு போன் செய்து, விளைந்திருந்த கரும்பு பயிரை சரியான நேரத்தில் அறுவடை செய்து சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்ல முடியாததால் பெரும் நஷ்டத்தை சந்தித்து இருப்பதாகவும், இதனால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் அவரை காப்பாற்ற விவசாய நிலத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் நாம்தேவ் ஜாதவ் நைலான் கயிற்றால் அங்கிருந்த வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயி நாம்தேவ் ஆத்மராம் ஜாதவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.