கடற்கரையில் மீனவர் வெட்டிபடுகொலை.. சிக்காத தடயங்கள்
கடற்கரையில் மீனவர் வெட்டிபடுகொலை.. சிக்காத தடயங்கள்
மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவர் மர்மமான முறையில் உடல் முழுவதும் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்தவர் மணிமாறன் என்கிற அசோக்குமார் (26). மீனவரான இவர் தினமும் தனது தந்தை மற்றும் சகோதரருடன் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். அதேபோல் இரவில் நீண்ட நேரம் கடற்கரை மணலில் படுத்து உறங்கும் பழக்கம் உடையவர்.
இந்த நிலையில், காலை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கடற்கரையில் கண்ட காட்சியால் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது, கடற்கரையில் கை, கால், தலை, வாய் பகுதியில் கத்தியால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் அசோக்குமார் பிணமாக கிடந்தார். அவரது முகம் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.
இதுகுறித்து மீனவர்கள் மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் போலீசார் அசோக்குமார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அசோக் குமார் உடல் அருகே தப்பி ஓடிய கொலையாளிகள் குறித்த தடயங்கள் ஏதாவது உள்ளதா? என தடயவியல் துறை நிபுணர்களை வரவழைத்து தடயவியல் கருவி மூலம் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து கடற்கரை பகுதியில் இரவு நேரங்களில் நடமாடிய சுற்றுலா பயணிகள், அங்குள்ள விடுதி, உணவகத்திற்கு வந்த நபர்கள் பற்றிய விவரங்களை கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அங்குள்ள உணவகங்களில் உள்ள சில கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில் 4 இளைஞர்கள் இரவு நேரத்தில் கடற்கரைக்கு வந்து செல்வதுபோன்று காட்சிகள் பதிவாகி இருந்தன. அதேபோல் கொலை நடந்த அன்று அங்குள்ள உணவகம், விடுதிகளில் யார்? யார்? வந்து தங்கினார்கள் என போலீசார் விசாரித்தனர்.
கத்தியால் கொலை நிகழ்ந்த சம்பவம் இப்போதுதான் முதல், முறையாக மாமல்லபுரம் கடற்கரையில் நடந்துள்ளது என்று அந்த பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கொலையாளிகளை விரைவில் கைது செய்யக்கோரி மாமல்லபுரம் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, மீனவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் துக்கம் அனுசரித்தனர். விரைவில் கொளையாளிகள் கைது செய்யப்படுவர் என போலீசார் மீனவர்களிடம் உறுதி அளித்தனர்.
newstm.in