மீனவ பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. படுகொலை செய்து உடல் எரிப்பு.. 6 பேரிடம் விசாரணை..!
மீனவ பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. படுகொலை செய்து உடல் எரிப்பு.. 6 பேரிடம் விசாரணை..!
ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா (45). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடல் பாசி சேகரிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது, அங்குள்ள இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வடமாநிலத்தவர்கள் சந்திராவை கேலி செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (24-ம் தேதி) காலை வழக்கம் போல் கடல் பாசி சேகரிக்க சென்ற போது சந்திராவை இறால் பண்ணை அருகே அடர்ந்த காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்தனர். மேலும், அவருடைய உடலை மறைக்கும் நோக்கத்தோடு தீ வைத்து எரித்துள்ளனர்.
கடல் பாசி சேகரிக்க சென்ற சந்திரா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் மீனவ கிராம மக்கள் கடலோர பகுதியில் தேடியுள்ளனர்.
பின்னர், ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சந்திராவை தேடியுள்ளனர். அப்போது, காட்டுப் பகுதியில் பாதி எரிந்த நிலையில் கிடந்த சந்திராவின் உடலை கண்டுபிடித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த சந்திராவின் உறவினர்கள் மற்றும் மீனவ கிராம மக்கள், இறால் பண்ணையை அடித்து நொறுக்கியதுடன் அதில் பணியாற்றிய வடமாநிலத்தவர்கள் தான் சந்திராவை கூட்டு பாலியல் செய்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டு அவர்களை சரமாரியாக தாக்கி, அவர்களின் வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர்.
இதனால் அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். குற்றவாளியாக சந்தேகப்படும் வடமாநில தொழிலாளர்கள் 6 பேரையும் பிடித்த போலீசார், விசாரணைக்காக அவர்களை காவல் நிலையம் கூட்டிச் சென்றனர்.