மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்துறாங்க.. கலெக்டர் ஆபீஸில் பெண் தீக்குளிக்க முயற்சி..!

மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்துறாங்க.. கலெக்டர் ஆபீஸில் பெண் தீக்குளிக்க முயற்சி..!

Update: 2022-05-17 05:55 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே கருப்ப குடும்பன் பச்சேரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வளர்மதி. இவர், இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நிலையில், கையோடு கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதைப் பார்த்த அங்கு காவல் பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் அவரை தடுத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், “கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக என்னை இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்படி கிராமத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். தொடர்ந்து என்னை தொந்தரவு செய்து வருவதுடன், எனது மகனையும் அவர்கள் அடித்து துன்புறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தீக்குளிக்க முயற்சி செய்தேன்” என்று அவர் கூறினார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்துவதாகக்கூறி பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News