முன்னாள் அமைச்சரை விடாத கருப்பு.. அதிமுக மாவட்ட செயலாளர் மீது மோசடி புகார் !!
முன்னாள் அமைச்சரை விடாத கருப்பு.. அதிமுக மாவட்ட செயலாளர் மீது மோசடி புகார் !!
அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி செய்ததாக அவரது தம்பி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்து மற்றும் விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அவர்களின் இளைய சகோதரரான நல்லதம்பி என்பவர் வழக்கறிஞராகவும் அதிமுகவில் பொறுப்புகளையும் வகித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்ததாக அவர் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் நல்லதம்பி தனது சகோதரரான விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி வள்ளி ஆகிய இருவரும் சேர்ந்து பத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் பல்கலைக்கழகத்திலும் மற்றும் அரசு வேலை வாங்கித் தருவதாக சுமார் 40 லட்சம் வரை பணம் பெற்றுள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஆனால் எந்தவித பணியும் யாருக்கும் வாங்கித் தர படவில்லை எனவே பணத்தை திருப்பித் தரும்படி கேட்ட பொழுது காத்திருக்கச் சொல்லி பல ஆண்டுகளாக இழுத்தடிப்பதாகவும் தெரிவித்துள்ளார். சகோதரரின் மனைவி வள்ளி கொடைக்கானல் மதர் தெரசா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆவார்.
மேலும் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடியில் ஈடுபட்டு வரும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பான விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர்கள் இடையே கருத்து மோதல்கள் இருந்து வரும் நிலையில் ரவிச்சந்திரன் மீது அவரது சகோதரர் பண மோசடி புகார் கொடுத்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in