மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ்.. மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!
மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ்.. மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!
மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் முகாம் 3 நாட்கள் நடக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு 2022 - 2023-ம் ஆண்டிற்கான இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் முகாம் வரும் 30-ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. இந்த முகாம் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த முகாமில், மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கவும், மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளிக்கு சென்று வர இலவச பேருந்து பயண அட்டைக்கும் விண்ணப்பிக்கலாம்.
அத்துடன், சிகிச்சை தொடர்பாக மருத்துவமனைக்கு சென்று வருவதற்கான மருத்துவச் சான்றுடன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன், ஆதார் அட்டை நகல், 3 புகைப்படங்கள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, யூ.டி.ஐ.டி அட்டை அசல் மற்றும் நகலுடன் நேரில் சென்று இலவச பயண அட்டை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.