கொரோனாவுக்கு நண்பர் பலி.. மனைவிக்கு மறுவாழ்வு கொடுத்த இளைஞர்.. குவியும் பாராட்டு..!

கொரோனாவுக்கு நண்பர் பலி.. மனைவிக்கு மறுவாழ்வு கொடுத்த இளைஞர்.. குவியும் பாராட்டு..!

Update: 2022-02-08 11:55 GMT

கொரோனாவுக்கு பலியான நண்பரின் மனைவியை மறுமணமாக திருமணம் செய்த இளைஞரின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா முள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் சேத்தன் குமார் (41). இவருக்கும், ஹனூர் டவுனை சேர்ந்த அம்பிகா (30) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது.

சேத்தன் குமார் பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கொரோனா 2-வது அலையின் போது சேத்தன் குமார் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இதனால் மிகவும் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட அம்பிகா, தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த சேத்தன் குமார் நண்பர் லோகேஷ் என்பவர், தற்கொலைக்கு முயன்ற அம்பிகாவை காப்பாற்றினார்.

இதைதொடர்ந்து சில நாட்களில், அம்பிகாவை திருமணம் செய்து கொள்ள லோகேஷ் விருப்பம் தெரிவித்தார். இதற்கு அம்பிகாவும் சம்மதம் தெரிவித்தார். இதுபற்றி அவர்கள் தங்களது வீட்டினரிடம் தெரிவித்தனர். அவர்களும் திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டினர். 

இந்நிலையில் கடந்த 27-ம் தேதி அம்பிகாவுக்கும், லோகேசுக்கும் பெங்களூருவில் திருமணம் நடந்தது. கொரோனாவுக்கு பலியான நண்பரின் மனைவியை மறுமணமாக திருமணம் செய்த லோகேசின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Similar News