நண்பர் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும்.. முதல்வர் ஸ்டாலின் !!
நண்பர் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும்.. முதல்வர் ஸ்டாலின் !!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்துவருகிறார். கட்சி நடவடிக்கைகளை அவரின் குடும்பத்தினர் கவனித்துக்கொள்கிறார்கள். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்கூட அவர் போட்டியிடவில்லை. விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் மட்டுமே அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகநாந்தின் கால் விரல்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அகற்றப்பட்டுள்ளது என்றும் ஒரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று தேமுதிக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீண்ட வருடங்களாக இருக்கும் நீரழிவு பிரச்சனையால் (சர்க்கரை நோய்) தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது.
மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விஜயகாந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஒரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார்.
மேலும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரு நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நண்பர் விஜயகாந்த் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில், எனது அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன் என்றுள்ளார்.
எனது அருமை நண்பர் கேப்டன் @iVijayakant அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன்.
— M.K.Stalin (@mkstalin) June 21, 2022
newstm.in