ரேஷன் கடைகளில் காஸ் சிலிண்டர்.. தமிழக கூட்டுறவுத் துறை முடிவு..!

ரேஷன் கடைகளில் காஸ் சிலிண்டர்.. தமிழக கூட்டுறவுத் துறை முடிவு..!

Update: 2022-07-17 17:30 GMT

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் கேஸ் சிலிண்டர்களை விற்பனை செய்கிறது.

இந்த இரண்டு சிலிண்டர்களும் பெற கேஸ் ஏஜன்சிகளில் ஆதார் எண், முகவரி சான்று ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். சிலிண்டர் வேண்டி பதிவு செய்ததும் டெலிவரி செய்யப்படும்.

வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்கள் மற்றும் கல்லூரிகளில் படிப்போர் தாங்கள் வசிக்கும் நகரங்களில் முகவரி சான்று இல்லாததால், சிலிண்டர் இணைப்பு பெற சிரமப்படுகின்றனர்.

அவர்களின் வசதிக்காக, முக்கிய இடங்களில் உள்ள ஏஜன்சிகளில் 5 கிலோ சமையல் கேஸ் சிலிண்டர் விற்கப்படுகிறது. இதை வாங்க முகவரி சான்று தேவையில்லை; ஏதேனும் ஒரு அடையாள சான்று வழங்கினால் போதும்.


முதல் முறையாக சிலிண்டர் வாங்கும் போது மட்டும் முன்பணம் செலுத்த வேண்டும். பின்னர், சிலிண்டரில் கேஸ் தீர்ந்ததும் மீண்டும் வாங்கும் போது அந்த மாதத்திற்கான கேஸ் விலையை வழங்கினால் போதும். பலருக்கு, இந்த 5 கிலோ சிலிண்டர் விற்பனை விவரம் தெரியவில்லை.

இதையடுத்து, அனைவரும் 5 கிலோ சிலிண்டர் விற்பனை விவரம் தெரிந்து கொள்ளும் வகையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் இணைந்து, இந்த சிலிண்டரை ரேஷன் கடைகளில் விற்க, தமிழக கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது.

முதல் கட்டமாக, சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை ஆகியவை நடத்தும் ரேஷன் கடைகளில் 5 கிலோ சிலிண்டர் விற்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

இது குறித்து, கூட்டுறவுத் துறையின் பொது விநியோக திட்ட இணை பதிவாளர் தேன்மொழி, கூட்டுறவு சங்கங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், “கூட்டுறவு ரேஷன் கடைகளில் இந்தியன் ஆயில் நிறுவனம் வகுத்துள்ள பாதுகாப்பு நிபந்தனைக்கு உட்பட்டு, உரிய அலுவலரிடம் உரிமம் பெற்று, 5 கிலோ வணிக சிலிண்டர்களை விற்பனை செய்ய வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரேஷன் ஊழியர்கள் கூறுகையில், ‘ரேஷன் கடைகளில் உணவு தானியங்களை வைக்கவே இடவசதி இல்லை. அதிக ஆபத்து உள்ள சிலிண்டர்களை பாதுகாப்பாக கையாளுவதில் அதிக சிரமம் உள்ளது.

எனவே, சிலிண்டர் விற்பனையை தொடங்கும் முன்பு, அதற்கான சாதக, பாதகம் குறித்து ஊழியர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும்’ என்றனர்.

Similar News