காதலிக்கு நிச்சயம்.. போஸ்டர் ஒட்டிய காதலன்! வலைவீசும் போலீஸ்..!
காதலிக்கு நிச்சயம்.. போஸ்டர் ஒட்டிய காதலன்! வலைவீசும் போலீஸ்..!
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் விஜய் ரூபன். இவர், களக்காடு பகுதியில் லவ் பேர்ட்ஸ் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
அத்துடன், நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களக்காடு நகராட்சி 2-வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டு 18 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.
விஜய் ரூபன் தனது தூரத்து உறவினரான மேலபத்து பகுதியைச் சேர்ந்த தானியேல் என்பவரின் மகளை 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் தந்தையிடம் திருமணம் செய்ய பெண் கேட்டுள்ளார். அவர் திருமணம் செய்து கொடுக்க மறுத்துள்ளார்.
இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயமானது. இதையறிந்த விஜய் ரூபன், அந்தப் பெண்ணுடன் ஜோடியாக எடுத்த போட்டோ மற்றும் அவர் கொடுத்த கடிதம் ஆகியவற்றை கவிதை வசனத்தோடு போஸ்டர் அடித்து, களக்காடு நகர் பகுதி முழுவதும் ஒட்டி உள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பெண்ணின் தந்தை தானியேல், களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் களக்காடு போலீசார் விசாரணை செய்து விஜயை தேடி வருகின்றனர்.
விஜய் ரூபன் தற்போது தலைமறைவாகியுள்ளார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அவருடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.