அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்..!!

அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்..!!

Update: 2022-06-29 05:45 GMT

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கையெழுத்திட்ட 5 திட்டங்களில் ஒன்றான, சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் அனைவரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்து வருகின்றனர். இந்த திட்டத்தால் சாதாரண கட்டண பேருந்துகளில் வசூல் குறைந்து, அதன் மூலம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு வழங்கப்படும் வசூல்படியும் குறைந்தது.

இந்நிலையில், சாதாரண பயண கட்டண பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

இது குறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு  போக்குவரத்துக்கழகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த, நான்காவது கட்ட பேச்சுவார்த்தை 12.05.2022 அன்று அமைச்சர் சிவசங்கர் தலைமையில், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் டாக்டர் கோபால் முன்னிலையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அப்போது  மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு வசூல்படியை நிர்ணயம் செய்திட வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து முதல்வரின் அறிவுரையின் பேரில், மாநகர் போக்குவரத்துக்கழகம் (சென்னை) லிட்., சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு  அரசு போக்குவரத்துக்கழக சாதாரண பயண கட்டண பேருந்துகளில் மகளிர் இலவச பேருந்து பயணம் செய்ய அனுமதித்ததை தொடர்ந்து ஓட்டுநர், நடத்துநர்கள் பெற்று வந்த வசூல்படி குறைவினை ஈடுகட்டும் வகையில் அதனை உயர்த்தி முறைப்படுத்தி வழங்கும் வகையில் சாதாரண கட்டண பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

Similar News