அரசு பணம் முறைகேடு.. ஊராட்சி மன்ற தலைவர் பதவிநீக்கம்.. மக்கள் கொண்டாட்டம் !!

அரசு பணம் முறைகேடு.. ஊராட்சி மன்ற தலைவர் பதவிநீக்கம்.. மக்கள் கொண்டாட்டம் !!

Update: 2022-06-06 17:38 GMT

நிதி முறைகேடு புகாரில் ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா ஜி.மோகன் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்துக்குட்பட்டது கோட்டைமேடு ஊராட்சி மன்ற தலைவராக ஷர்மிளா என்பவர் இருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று ஷர்மிளா என்பவர் ஊராட்சி மன்ற தலைவரானார்.

இவர் பதவியேற்ற சில நாட்களிலேயே தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி, ஊராட்சி நிதியை சொந்த வங்கி கணக்குக்கு மாற்றி முறைகேடு செய்துள்ளார். இது தொடர்பாக அக்கிராம மக்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இந்த வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஊரக உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, அதிகாரிகள் ஊராட்சி தலைவர் ஷர்மிளா ஜி.மோகனிடம் விளக்கம் கேட்டபோது, அவர் முறையான விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

அடுத்தபடியாக வாடிப்பட்டி வட்டாட்சியர் மற்றும் அலங்காநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழு, கிராம நிதி பதிவேட்டை தணிக்கை செய்தது. இந்த ஆய்வில் சுமார் ரூ.10 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் அரசுப்பணம் முறைகேடு செய்யப்பட்டது உறுதியானது.

ஊராட்சி பணம் முறைகேடு உறுதிப்படுத்தப்பட்டதால், 1994 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்பிரிவு 205ன் கீழ் பதவிநீக்கம் செய்யலாம் என கூறி ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் தீர்மானம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அனீஷ் உத்தரவின்பேரில் மதுரை மாவட்டம் கோட்டைமேடு ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா ஜி.மோகன் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இந்த நடவடிக்கை தவறு செய்யும் மற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு பாடமாக அமையும் என்று பலரும் கூறி வருகின்றனர். 

newstm.in

Similar News