மாணவர்களின் வாசிப்புத்திறனை ஊக்குவிக்க தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு..!!

மாணவர்களின் வாசிப்புத்திறனை ஊக்குவிக்க தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு..!!

Update: 2022-06-26 05:10 GMT

மாணவர்களின் வாசிப்புத்திறனை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாதம் இருமுறை தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழ் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். அதுபோல  உயர்வகுப்பு மாணவர்களுக்கு ‘தேன்சிட்டு’ இதழும், ஆசிரியர்களுக்கான படைப்புத் தளத்தை உருவாக்க ‘கனவு ஆசிரியர்’ இதழ் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொடக்க வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழ், உயர் வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழ் மற்றும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் மாத இதழ் வெளியிட பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீட்டுள்ளது.

அதனை செயல்படுத்தும் வகையில் ஒரு ஆண்டுக்கு 20 மாணவர் இதழ்களும் 10 ஆசிரியர் இதழ்களும் அச்சிடப்பட்டு பள்ளிக்குச் சென்று வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த 7.15 கோடி ரூபாய் நிதியை அரசு நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த இதழ்களில் தேசிய மாநில செய்திகள் மட்டுமன்றி அந்தந்த மாவட்டச் செய்திகளும் மாவட்டத்திலுள்ள மாணவர்களின் படைப்புகளும் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விதழ்களை வகுப்பறைச் சூழலுடன் நயம்பட இணைத்து வாசிப்பை பேரியக்கமாக மாற்றும் வண்ணம் பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவில் கதை, கட்டுரை, கவிதை, ஓவியம், பேச்சு உள்ளிட்ட பல்வேறு படைப்புத் திறன்களை வெளிக்கொணர போட்டிகளும் மாணவர்களை ஊக்குவிக்கப் பயிற்சிப் பட்டறைகளும் வல்லுநர்கள் மூலமாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News