சாலை விபத்தில் மரணம்- இழப்பீட்டு தொகையை 8 மடங்காக உயர்த்திய அரசு !!

சாலை விபத்தில் மரணம்- இழப்பீட்டு தொகையை 8 மடங்காக உயர்த்திய அரசு !!

Update: 2022-02-28 18:15 GMT

சாலை விபத்துகளில் உயிரிழப்பவா்களின் குடும்பத்திற்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை 8 மடங்காக உயா்த்தப்பட்டு உள்ளது.  

நாடு முழுவதும் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு மத்திய அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல்,  காயம் அடைபவர்களுக்கும் நிவாரணத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சாலை விபத்துகளில் உயிரிழப்பவா்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை 8 மடங்காக உயா்த்தப்பட்டு உள்ளது. அதன்படி, 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக இழப்பீடு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இது தொடா்பான மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது, சாலை விபத்துகளில் பலத்த காயம் அடைந்தவா்களுக்கு நிவாரணமாக தற்சமயம் வழங்கப்படும் தொகை 12,500 ரூபாயில் இருந்து 50,000 ரூபாயாக உயா்த்தப்படுகிறது. விபத்தில் உயிரிழப்பவா்களின் குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்படும் தொகை 25,000 ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயா்த்தப்படுகிறது.
 
கடந்த 1989 ஆம் ஆண்டின் நிவாரண உதவித் திட்டத்துக்கு மாற்றாக, 2022 ஆம் ஆண்டின் மோட்டாா் வாகன விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு நிவாரணம் வழங்கும் திட்டம், வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இழப்பீடு கேட்டு பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவி வழங்குவதை குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும், இவ்வாறு அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் சமீபத்திய தகவல்படி, கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் 3,66,138 சாலை விபத்துகள் நிகழ்ந்தன. அவற்றின் காரணமாக 1,31,714 போ் உயிரிழந்தனா் என்று கூறப்பட்டுள்ளது.


newstm.in

 

Similar News