பாட்டியை எரித்து கொன்ற பேத்திகள்.. காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்
பாட்டியை எரித்து கொன்ற பேத்திகள்.. காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்
நெல்லை அருகே பேட்டை ஆதம்நகர் எதிரே கடந்த 3ஆம் தேதி பெண் ஒருவர் எரித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு பிரேதம் ஒன்று எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.இதுதொடர்பாக பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் பழையபேட்டை கிருஷ்ணபேரியைச் சேர்ந்த பொன்.ஆறுமுகம் பிள்ளை என்பவரது மனைவி மாரியம்மாள் (30) மற்றும் இவரது சகோதரியான செக்கடி தெருவைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவரின் மனைவி மேரி (38) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. அதாவது, கொலை செய்யப்பட்டு கிடந்தவர் பழைய பேட்டை கண்டியபேரியை சேர்ந்த சுப்பம்மாள் (90) என்பதும், அவரை பேத்திகள் மாரியம்மாள், மேரி ஆகிய 2 பேர் சேர்ந்து கொலை செய்துள்ளனர் என்ற திடுக்கிடும் தகவலும் வெளியானது.
இதில் மேரி தனது பாட்டி சுப்பம்மாளை சில ஆண்டுகளாக பராமரித்து வந்தார். ஆனால், அவரால் தொடர்ந்து பராமரிக்க முடியாததால், தனது சகோதரியான மாரியம்மாள் வீட்டில் கொண்டு போய் விட்டார். ஆனால், அவரும் பராமரிக்க சிரமப்பட்டு வந்தார்.
இதையடுத்து 2 பேரும் சேர்ந்து சுப்பம்மாளை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 3ஆம் தேதி ஒரு ஆட்டோவில் சுப்பம்மாளை அழைத்துக் கொண்டு பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தனர்.
பின்னர் மாரியம்மாள் தான் வந்த ஆட்டோவை மீண்டும் வரவழைத்து அதில் ஏறி வீட்டிற்கு சென்றார். மேரி நடந்தே தனது வீட்டிற்கு சென்றது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொடூரக்கொலை தொடர்பாக மாரியம்மாள், மேரியை போலீசார் நேற்று கைது செய்தனர்.
newstm.in