பெரும் அதிர்ச்சி.. சிறுமிக்கு மது கொடுத்து பலாத்காரம்.. அரசியல் பிரமுகர் மகன் கைது..!
பெரும் அதிர்ச்சி.. சிறுமிக்கு மது கொடுத்து பலாத்காரம்.. அரசியல் பிரமுகர் மகன் கைது..!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து உறுப்பினராக இருப்பவர் சமர் கோலி. இவருடைய மகன் சோஹல். இவர், கடந்த வாரம் திங்கட்கிழமை தனது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார்.
இந்த விழாவிற்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் சென்றுள்ளார். பிறந்தநாள் விழா முடிந்து வீடு திரும்பிய சிறுமி கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, உள்ளூர் சுடுகாட்டில் அவசர அவசரமாக சிறுமியின் உடல் தகனம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த சிறுமி, விருந்தில் மது அருந்தும்படி வற்புறுத்தப்பட்டதாகவும், ஒரு பெண் மற்றும் அடையாளம் தெரியாத ஆண்களால் அவர் வீட்டில் இறக்கிவிடப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
மேலும், சோஹல் தன்னை அச்சுறுத்தியதாகவும் குற்றம் சாட்டிய நிலையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் சோஹலை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அந்த சிறுமி, பிறந்தநாள் விழாவுக்கு தனியாக சென்றாரா அல்லது சக நண்பர்களுடன் சென்றாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
கொல்கத்தாவில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கிராம பஞ்சாயத்து உறுப்பினரின் மகனால் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், மேற்கு வங்க மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.