இன்று தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வு!!
இன்று தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வு!!
இன்று தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது.
இந்நிலையில் தேர்வர்கள் எதில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டும் என்று பார்க்கலாம். தேர்வு எழுதுபவர்கள் தேர்வு கூடத்திற்கு 08.30 மணிக்கு வந்து சேர வேண்டும் என்றும் 9 மணிக்கு மேல் வருபவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.
தேர்வானது காலை 09:30 மணிக்கு தொடங்கி மதியம் 12:30 மணி வரை நடைபெறும். தேர்வு எழுத உங்களுக்கு வழங்கப்படும் ஓஎம்ஆர் ஷீட் உங்களுடையது தானா என்பதை தெளிவாக பார்த்த பின்னரே நீங்கள் பதிலளிக்க தொடங்க வேண்டும், தவறான ஷீட்டில் பதிலளித்துவிட்டால் பேப்பர் நிராகரிக்கப்படும்.
தேர்வர்கள் தேர்வெழுதும் இடத்திற்கு ஸ்மார்ட் வாட்ச் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவைப்படுபவர்கள் சாதாரண வாட்ச்களை வேண்டுமானால் அணிந்துகொண்டு செல்லலாம், இருப்பினும் தேர்வறையில் நேர கணக்கை அறை கண்காணிப்பாளர் தெரிவிப்பார்.
தேர்வர்கள் தேர்வெழுத கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டுமென டிஎன்பிஎஸ்சி ஆணையம் கூறியுள்ளது, ஆய்வாளர்கள் சரிபார்க்கும்பொழுது மட்டும் முக கவசத்தை அவிழ்க்கலாம் என்றும் மற்ற நேரம் முகக்கவசத்தை அணிந்து தான் தேர்வு எழுத வேண்டும் என்றும் கூறியுள்ளது.
தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும், இதன் மொத்த மதிப்பெண்கள் 300 ஆகும். தமிழ் அல்லது ஆங்கில பகுதியில் இருந்து 100 வினாக்களும், பொது அறிவு பகுதியிலிருந்து 75 வினாக்களும், கணித பகுதியிலிருந்து 25 வினாக்களும் கேட்கப்படும்.
குரூப் 2 தேர்வின் முதல்நிலை முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்பட்டு, இரண்டாம் கட்ட தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும், இதன் முடிவுகள் டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in