குஜராத் விஷ சாராயம்.. பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு.. 50 பேருக்கு சிகிச்சை..!
குஜராத் விஷ சாராயம்.. பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு.. 50 பேருக்கு சிகிச்சை..!;
குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் கடந்த திங்கட்கிழமை காலை சாராயம் விற்கப்பட்டுள்ளது. அதை வாங்கிக் குடித்த பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்துள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியானது.
30-க்கும் மேற்பட்டோர் பல இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை நேற்று 28 ஆக அதிகரித்தது. இது தொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. டிஎஸ்பி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில், கடந்த 12 மணி நேரத்தில் பொடாட் மாவட்டத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 40 ஆக உயர்ந்துள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குஜராத்தின் பாவ்நகர், பொடாட் மற்றும் ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனைகளில் இன்னும் 50 பேர் வரை தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அவர் கூறியுள்ளார். இதனால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.