இலங்கை அதிபர் கோத்தபய ராஜினாமா ? - இன்று வெளியாகிறது அறிவிப்பு !!
இலங்கை அதிபர் கோத்தபய ராஜினாமா ? - இன்று வெளியாகிறது அறிவிப்பு !!;
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள அந்நாட்டு மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
முன்னதாக நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு ராஜபக்சே குடும்பத்தினரின் சொத்துகளுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர். அதன்பிறகு அமைதியாக போராட்டம் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் எவ்வித பொருளாதார மீட்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்போது மக்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், தலைநகர் கொழும்புவில் உள்ள இலங்கை அதிபர் மாளிகையை ஆயிரக்கணக்கான மக்கள் சூறையாடியனர். மாளிகையை முழுவதுமாக போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையே, இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்து உள்ளதாக, ரணில் விக்ரமசிங்கே அறிவித்தார். மேலும், அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே இன்று (புதன்கிழமை) ராஜினாமா செய்ய இருப்பதாகவும் பிரதமர் அலுவலகம் உறுதி அளித்துள்ளது.
இந்நிலையில், ராஜினாமா கடிதத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சே கையெழுத்திட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கடிதத்தில், 13 ஆம் தேதியை குறிப்பிட்டு, கோத்தபய ராஜபக்சே கையெழுத்திட்டு உள்ளார். இந்தக் கடிதம், முறைப்படி நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன்படி, சபாநாயகர் வாயிலாக கோத்தபய ராஜபக்சே ராஜினாமா தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக இன்று வெளியாக உள்ளது.
முன்னதாக, துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சகோதரர் பசில் ராஜபக்சேவை, விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அவருக்கு அமெரிக்காவும் விசா வழங்கமறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
newstm.in