இலங்கையில் இருந்து மாலத்தீவு தப்பிச் சென்றாரா இலங்கை அதிபர்..!
இலங்கையில் இருந்து மாலத்தீவு தப்பிச் சென்றாரா இலங்கை அதிபர்..!;
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள், உணவுப்பொருட்கள், எரிபொருள், மருந்து பொருட்கள் மற்றும் விவசாய இடுபொருட்கள் பற்றாக்குறையால் நாட்டின் 22 மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகி, ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால் அவர் பதவியேற்ற பின்னும் இலங்கையின் நிலைமையில் முன்னேற்றம் தெரியவில்லை. தற்போதும் பல நாட்கள் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு மிகக்கடுமையாக உயர்ந்துள்ளதால் ஆத்திரமடைந்த மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த நிலையில், அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்ச விலக வலியுறுத்தி, அவரது மாளிகையை முற்றுகையிட்டு கடந்த சனிக்கிழமை முதல் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையறிந்து முன்னதாகவே அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய வெளியேறினார்.
இதையடுத்து, அதிபர் பதவியிலிருந்து இன்று விலகுவதாக கோத்தபயவும், பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்க-வும் அறிவித்தனர். எனினும், பதவிவிலகும் வரை, அதிபர் மாளிகையை விட்டு வெளியேற மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, விசா வழங்குமாறு கோத்தபய விடுத்த கோரிக்கையை அமெரிக்கா அண்மையில் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறப்பு விமானப்படை விமானம் மூலம் அதிபர் கோத்தபய ராஜபக்ச, நேற்று அதிகாலை மாலத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றார். கொழும்புவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் கோத்தபய ராஜபக்ச, அவரது மனைவி, மெய்க்காவலர் உள்ளிட்ட 4 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
President Gotabaya Rajapaksa arrives in Malé, the capital of the Maldives in an air force plane#SriLankaProtests #lka #SriLanka #NewsUpdate @GotabayaR pic.twitter.com/ILgeaiIMOj
— Lakshan Dissanayaka (@Lakshandissana) July 13, 2022